இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டம், பெங்கேய் என்ற இடத்தில் மாநில போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு கிராம தன்னார்வலர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திருடும் நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஆக்ராம் சனாத்டோன்(24) என்ற வாலிபர் படுகாயமடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். போலீசார் கூறுகையில்,‘‘ கிராம தன்னார்வலர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் உள்ளே வராமல் இருக்க முதலில் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. அதையும் மீறி உள்ளே வந்ததால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது’’ என்றனர். மணிப்பூரில் கடந்த ஆண்டில் இருந்து நடந்து வரும் கலவரத்தில் 180க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.