விருதுநகரில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் ஆளுநர்களாக இருந்தவர்களில் ஆளுநர் ரவி வித்தியாசமானவராக நடந்து கொள்கிறார். அரசியல் சாசனத்தை மீறி தொடர்ந்து செயல்படுகிறார். ஆளுநருக்கான மரியாதையை குறைத்து கொண்டு வருகிறார். ஆளுநர், பாஜ தலைவரை போல் செயல்படுவது வருத்தம் தருகிறது.
விரைவில் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது குடியரசு தலைவர் ஆளுநரை வாபஸ் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் அரசியல் செய்து வருவது தமிழகத்தை மட்டுமல்லாது முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் பாஜவின் வேடமோ என எண்ண தோன்றுகிறது. தமிழகத்தின் உரிமைகளை, பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேச இடம் தர தயாராக இல்லை.
தமிழகத்திற்கு நிதி குறைப்பு, மீனவர் பிரச்னையை கேட்க நாடாளுமன்றத்தில் அனுமதியில்லை. ஆளுநரும் அரசியல் செய்து வருவது தமிழகத்திற்கு எதிரான மோடி அரசின் மனநிலையை காட்டுகிறது. தமிழகத்திற்கு எதிரான மனநிலை உடைய ஆளுநரை தொடர விடுவது மோடி தமிழகத்திற்கு செய்யும் துரோகமாக பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
* நட்டாவை கேவலப்படுத்தும் அண்ணாமலை
சென்னை வந்த நட்டா தமிழகத்திற்கு மோடி அதிகம் செய்வதாக கூறியது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, ‘‘ஜே.பி.நட்டா, யாரோ எழுதி கொடுப்பதை படிப்பவர். அவரை கேவலப்படுத்துவதற்காக அண்ணாமலை ஏதாவது ஒன்றை எழுதி கொடுத்து விடுவார். கடந்த முறை வந்தபோது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தவர். இதுவும் எய்ம்ஸ் போன்ற தகவலே’’ என்று மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.