Friday, May 10, 2024
Home » பள்ளிக்கரணையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக்கொலை: காதலியின் அண்ணன் உட்பட 5 பேர் கைது

பள்ளிக்கரணையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக்கொலை: காதலியின் அண்ணன் உட்பட 5 பேர் கைது

by Ranjith

சென்னை: பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம்பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிக்கரணையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காதலியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ன்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர், அந்த வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

இதை பார்த்து பொதுமக்கள் திரண்டதால், அந்த 4 பேரும் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அந்த வாலிபரை, அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், அந்த வாலிபர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், படுகொலை செய்யப்பட்டவர் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் (26) என தெரியவந்தது. மெக்கானிக் வேலை செய்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இவர், ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த பிபிஏ படித்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை மீறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த இளம்பெண்ணை எழும்பூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளார். பின்னர், தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பிரவீன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகே பிரவீன் நடந்து செல்வதை நோட்டமிட்ட இளம்பெண்ணின் அண்ணன் தினேஷ், அவரது நண்பர்கள் 4 பேர், அங்கு வந்து, பிரவீனை சுற்றிவளைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது. தையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நெடுமாறன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த இளம்பெண்ணின் அண்ணன் ஜல்லடியன்பேட்டை சாய்கணேஷ் நகர் 2வது பாகத்தை சேர்ந்த தினேஷ் (23), அவரது நண்பர்கள் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 8வது தெருவை சேர்ந்த ஸ்ரீராம் (18), பள்ளிக்கரணை விவேகானந்தர் நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் (25), சித்தாலப்பாக்கம் ஜெயா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த விஷ்ணுராஜ் (25), சித்தாலப்பாக்கம் எம்ஜிஆர் நகர் 2வது தெருவை சேர்ந்த ஸ்டீபன் குமார் (24) ஆகிய 5 பேரை நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* பழிக்குப்பழி சம்பவம்
கொலையான பிரவீன், கடந்த 2022ம் ஆண்டு பள்ளிக்கரணை பகுதியில் ஷியாம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். அப்போது ஷியாம் நண்பரான ஸ்டீபன் குமார், பழிக்குப்பழியாக பிரவீனை கொலை செய்ய சபதமேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதல் திருமணம் செய்த இளம்பெண்ணின் அண்ணன் தினேஷ், பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதை அறிந்த ஸ்டீபன் குமார், அவருடன் சேர்ந்து, பிரவீனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

You may also like

Leave a Comment

18 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi