மணப்பாறை: மணப்பாறை அருகே பெருமாள் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளநாட்டில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை ஒட்டி பெருமாளுக்கு நடந்த திருக்கல்யாண வைபவத்திற்காக வளநாடு ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் மலர்மாலைகள், தேங்காய், பழங்கள், உப்பு, அரிசி, பருப்பு, நெய் மற்றும் பீரோ உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக அவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
சீர்வரிசை பொருட்களை பெற்று கொண்டு இஸ்லாமியர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை கொடுக்கப்பட்டது. சீர்வரிசை வழங்கப்பட்ட பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமாக லட்டு வழங்கியதுடன் ஜமாத் நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாகிகள் பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினர். பெருமாளுக்கு இஸ்லாமியர்கள் சீர்தந்த நிகழ்வு ஜாதி, மதங்களை கடந்த தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றியது.