திருவொற்றியூர்: மணலி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அவற்றை சரிப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், மணலி குடிநீரேற்று நிலையத்தில் இருந்து மணலி சாலை வழியாக எண்ணூர் பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
எர்ணாவூர் ஜோதி நகர் அருகே இன்று அதிகாலை ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. சுமார் 15 அடி உயரத்துக்கு குடிநீர் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறுவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் வந்து உடைந்த குழாயை சரி செய்து வருகின்றனர்.