அகமதாபாத்: வாக் பக்ரி டீ குழும நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் தெருநாய்கள் துரத்தும் போது கீழே விழுந்தததில் தலையில் அடிபட்டு சிகிச்சை பலன் இன்றி பலியானார். நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ள வாக் பக்ரி தேயிலை குழு 1892ல் நாரந்தாஸ் தேசாய் என்பவரால் நிறுவப்பட்டது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், சண்டிகர், இமாச்சல், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. வாக் பக்ரி நிர்வாக இயக்குனராக இருந்தவர் பராக் தேசாய். வயது 49. அவர் குழுமத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு தலைமை தாங்கினார். கடந்த வாரம் அவர் வீட்டிற்கு அருகே நடைபயிற்சி சென்று விட்டு திரும்பும் போது தெருநாய்கள் துரத்தின. இதை கண்டு பயந்து போன அவர் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் நாய்கள் தொடர்ந்து துரத்தியதில் தவறி அவர் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நாய்கள் அவரை கடிக்கவில்லை என்றாலும் தவறி விழுந்ததில் மூளையதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து பராக் தேசாய் கடந்த வாரம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் இறந்துவிட்டதாக சைடஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திங்கட்கிழமை காலை அவரது உடலக்கு இறுதிச்சடங்கு நடந்தது. அவரது இறுதி சடங்குகள் அகமதாபாத்தில் உள்ள தால்தேஜ் தகன மையத்தில் நடைபெற்றன. மறைந்த பராக் தேசாய்க்கு விதிஷா என்ற மனைவியும், பிரிஷா என்ற மகளும் உள்ளனர்.
* அமெரிக்காவில் முதுகலை பட்டம்
தாத்தா நாரந்தாஸ் தேசாய் தொடங்கிய வாக் பக்ரி டீ குழுமத்தில் பராக், அவரது சகோதரர் பராஸ் ஆகியோர் 1990களில் இணைந்தனர். 1992ல் மார்க்கெட்டிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற பராக் தேசாய் அமெரிக்கா சென்றார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, வார இறுதி நாட்களில் கடைக்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை சந்திப்பதிலும், அவரது தாத்தா தொடங்கிய தேநீர் பிராண்டின் மாதிரிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் ஈடுபட்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற பராக், வாக் பக்ரி டீ குழுமத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவர்.