கூச்பெஹார்: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து “மேற்குவங்கத்தை பயங்கரவாதிகளின் புகலிடமாக திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாற்றி விட்டது” என்று பாஜ கருத்து தெரிவித்துள்ளது. பாஜவின் கருத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். கூச்பெஹாரில் திரிணாமுல் வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “மேற்குவங்கம் பாதுகாப்பாக இல்லை என்று பாஜ தலைவர் சொன்னதை கேட்டேன்.
காவல்துறையின் உடனடி பதிலை தொடர்ந்து குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீங்கள்(பாஜ) ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் மாநிலங்களில் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்துக்கு எதிராக பாஜ பொய்களை பரப்பி வருகிறது. இப்படி பொய் பேசி அவதூறு பரப்புவதே அவர்களது பிழைப்பு” என்று குற்றம்சாட்டினார்.