மாமல்லபுரம்: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் தூய்மை பணியை நேற்று மாமல்லபுரம், தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் மதிமுக துணை பொது செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத் தலைவருமான மல்லை சி.ஏ.சத்யா துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களின் அரிய வரலாற்று சிறப்புகளை விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது கடற்கரையில் பரவியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பழைய கிழிந்த துணிகள், சுற்றுலா பயணிகள் வீசி சென்ற காலணிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டீல்கள் போன்றவற்றை கல்லூரி மாணவர்கள் சேகரித்து மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்தனர். இதில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கல்பனாதேவி, பிரசாந்த், பட்டாச்சாரியார்கள் சீனிவாசன், அனந்தசயனம், கோபாலகிருஷ்ணன், மல்லை தமிழ்ச் சங்க உறுப்பினர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.