Wednesday, May 29, 2024
Home » மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெற்கு பக்க வாசல் கதவுகள் மூடல்: மாற்றுத்திறனாளி, வயதானவர்கள் அவதி

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெற்கு பக்க வாசல் கதவுகள் மூடல்: மாற்றுத்திறனாளி, வயதானவர்கள் அவதி

by Ranjith

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலின் தெற்கு பக்க நுழைவு வாசல் கேட் மூடப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு, கிழக்கு, தெற்கு பகுதி என இரு நுழைவுப் பகுதி உள்ளது. வடக்கு பக்கம் திறந்த வெளியாக உள்ளது. இக்கோயிலில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து, தற்போது வரை திருப்பணிகள் நடந்து வருகிறது.

மேலும், திருப்பணிக்கு இடையூறு இல்லாத தெற்கு பக்க கதவை கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயில் நிர்வாகம் திடீரென் பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், ஓராண்டாகியும் தெற்கு பக்க கதவு இன்னும் திறக்கவில்லை. இக்கோயிலின், கிழக்கு பக்க கதவும் முறையாக இல்லாததால் கோயிலுக்கு எந்த பக்கம் செல்வது என்று பக்தர்கள் குழம்புகின்றனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகத்துக்கு தெற்கு வாசல் கேட் கதவை திறந்து வைக்க வேண்டும் என பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், இதுநாள் வரை தெற்கு பக்க கதவு திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கோயிலுக்கு வந்த வயதான முதியவர் ஒருவர் மூடியுள்ள தெற்கு பக்க கதவுக்கு அருகே உள்ள மிக குறுகிய இடத்தில் வீல்சேரில் உட்கார வைத்து கஷ்டப்பட்டு கோயில் வளாகத்தில் இருந்து நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியே அழைத்து வரப்பட்டார். எனவே, தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக தெற்கு பக்க வாசல் கதவை திறந்தும், கிழக்கு நுழைவு வாயில் பகுதியை பக்தர்களுக்கு தெரியும் வகையில் பெரிய கதவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

19 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi