திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மலப்புரம் கிராமத்தில் கிணறு ஒன்றில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் வீட்டு கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டு உரிமையாளர் மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது திடீரென கிணற்றில் தீ பற்றியது. எரிமலை போன்று தீ மேலே எழும்பியதால் அக்கம், பக்கத்தினர் அதிர்ந்து போயினர். தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிணற்றில் தீ பற்றியதற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பே பெருந்தல்மன்னா பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில், டீசல் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது சுமார் 20 ஆயிரம் லிட்டர் வெளியேறி வீணானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த டீசல் பூமிக்குள் சென்று நீரூற்று வழியாக இங்குள்ள பல கிணறுகளில் தேங்கி இருப்பதாகவும், இதன் காரணமாகவே மின் மோட்டாரை இயக்கியபோது தீ பற்றியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.