Thursday, May 16, 2024
Home » பராமரிப்பு பணிக்காக கண்ணாடி மாளிகை, புல் மைதானம் மூடல்

பராமரிப்பு பணிக்காக கண்ணாடி மாளிகை, புல் மைதானம் மூடல்

by Lakshmipathi

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகைகள், புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
ஊட்டிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வந்துச் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் காணப்படும். இதுதவிர எப்போதும் கண்ணாடி மாளிகையைில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், தற்போது கண்ணாடி மாளிகையில் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.அங்கிருந்த மலர் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதிதாக மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கண்ணாடி மாளிகையில் வர்ணம் பூசும் பணிகளும் நடக்கறது. இதனால், கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளது. பெரணி இல்லம் மற்றும் கள்ளிச் செடிகள் வைத்துள்ள கண்ணாடி மாளிகை ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.

புல் மைதானங்கள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் அவைகளும் மூடப்பட்டுள்ளது. எனவே, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேபோல், பராமரிப்பு பணிக்காக பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானமும் மூடப்பட்டுள்ளது. இதனால், புல் மைதானத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.50 கட்டணம் செலுத்தி உள்ளே வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண முடியாததாலும், புல் மைதானங்களில் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்ல முடியாத நிலையிலும் கடுப்பாகி விடுகின்றனர்.

சிலர் புல் மைதானங்களுக்குள் தடையை மீறி செல்லும் போது அவர்களை தடுக்கும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், ரூ.50 கட்டணம் செலுத்தி உள்ளே வரும் நாங்கள் எதையும் காணாமல் எப்படி வெளியே செல்வது என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, பூங்கா நிர்வாகம் உடனடியாக கண்ணாடி மாளிகையை சீரமைத்து அதில் மலர் அலங்காரங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், புல் மைதானங்களையும் சீரமைத்து அதற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

eight + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi