Tuesday, April 30, 2024
Home » மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

by Kalaivani Saravanan

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக புகழ்ப்பெற்ற மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கக்கூடிய நிகழ்ச்சி என்பது மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு செங்கோல் வழங்கப்படும். அதனை தொடர்ந்து திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கக்கூடிய வைபவங்கள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியின் போது மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கப்படும். இந்த கோயிலில் தற்போது அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். அவர் கணவரை இழந்தவர் என்பதால் அவர் செங்கோல் வாங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி தான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் என்பவர் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனு ஒன்று இரண்டு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இந்த மனுவை விசாரணை செய்து இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற மனுக்கள் மன வருத்தத்தை தருகிறது என வாதிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி சரவணன் மனுதாரர் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் விழாவில் திருமணம் ஆகாதவர்கள், வாழ்க்கைத் துணை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள் ? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே..அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல, பிற்போக்குத்தனமான கோரிக்கையுடன் வழக்கு தொடர்வதா? என மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கோயில் திருவிழா ஆரம்பித்த பின் கடைசி நேரத்தில் இதுபோன்று மனு தாக்கல் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றார். தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலரிடம் செங்கோல் வழங்கலை எதிர்த்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi