மதுரை: மதுரையில் பாஜ ஓபிசி அணி மாவட்ட நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கீழவல்லானந்தபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (34). மதுரை வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாநகர் பாஜ ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மதுரை வண்டியூர் சங்கு நகரில் மாவு மில் நடத்தி வந்த இவர், வாகனங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் டூவீலரில் மில்லுக்கு சென்ற சக்திவேல், அங்கிருந்து காலை 5.45 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். வண்டியூர் ரிங்ரோட்டில் இருந்து பிரிந்து அணுகுசாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை திடீரென ஒரு கும்பல் வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதங்களால் அவரது கழுத்துப் பகுதியில் வெட்டியது. தப்பியோட முயன்ற அவரை துரத்திச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்துபோலீசார் கூறும்போது, ‘‘கண்ணன் என்பவருக்கு சரக்கு வாகனம் வாங்க சக்திவேல் சில மாதங்களுக்கு முன் பணம் கொடுத்தார். அந்த பணம் கொடுக்கல் வாங்கலில் இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டு கண்ணன் தரப்பினர் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
மேலும் சக்திவேலின் மாவு மில்லில் வேலை பார்த்த மதுரை செல்லூரை சேர்ந்த ரஞ்சித், மருது ஆகியோருக்கு சில மாதமாக ஊதியம் வழங்கப்படாததால், வாக்குவாதமும், மோதலும் இருந்து வந்தது. இந்த ஆத்திரத்தில் கொலை நடந்ததா என 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். முழு விசாரணையும் முடிந்த பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும்’’ என்றனர். இதற்கிடையே, இந்த கொலை சம்பவத்தை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் சுசீந்திரன் தலைமையில் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.