திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதி திமுக முன்னாள் எம்பியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவருமான த.வேணுகோபால்(88), கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2.30 மணியளவில், அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவர் 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் தண்டராம்பட்டு தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருந்தார்.
1996, 1998, 1999, 2004ம் ஆண்டுகளில் திருப்பத்தூர் தொகுதி எம்பியாகவும், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி எம்பியாகவும் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இவரது உடலுக்கு அமைச்சர்காள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை,எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் உட்பட ஏராளமானோர் நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். த.வேணுகோபால் உடல் நல்லடக்கம் இன்று பகல் 1 மணிக்கு காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது.