மதுரை: மதுரை கொடிகுளம் பகுதியை சேர்ந்த பூரணம்மாள், அரசு உயர்நிலைப் பள்ளிக்காக மேலும் 91 சென்ட் நிலம் வழங்கியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூரணம்மாள். இவர் கனரா வங்கியில் எழுத்தராக உள்ளார். இவரது மகள் ஜனனி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவரது நினைவாக, கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்கு 1.52 ஏக்கர் நிலத்தை பூரணம்மாள் வழங்கினார்.
ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அரசுப் பள்ளிக்கு நிலம் வழங்கிய பூரணம்மாளுக்கு குடியரசுத் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். தற்போது மேலும் 91 சென்ட் நிலத்தை உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ள பூரணம்மாளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.