மதுரை: உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அரசாளும் ஊர் என்பதால் அதன் பெருமையை உலகமே அறியும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம். உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவார்.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் தேரோட்டத்தின்போது மாசி வீதியில் பக்தர்களுக்கு உணவு, நீர்மோர் வழங்கப்படும். இதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும். பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் செயற்கை சாயங்கள் சேர்க்கக்கூடாது. உணவு, உணவுப் பொருட்கள் தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.