அண்ணாநகர்: முகப்பேர் ஜீவன் பீமா நகரில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து ஒருவர் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெ.ஜெ.நகர் போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த பிரவீன்பாபு (24) என்பதும், முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கியவாறு, ஈக்காடுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று இவரும், நண்பர்களும் மது அருந்தியுள்ளனர். பின்னர் நண்பர்கள் உணவு வாங்க ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது போதையில் இருந்த பிரவீன்பாபு, மொட்டைமாடி சுவர் மீது ஏறி கீழே எட்டி பார்த்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.