போபால்: மத்தியப்பிரதேச காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் பாஜக அமைச்சர் நரேந்திர சிவாஜி நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற மகனை விடுவிக்கக்கோரி வாக்குவாதம் செய்தார்.
தம்பதியை தாக்கிய பாஜக அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு:
ம.பி.யில் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் நரேந்திர சிவாஜியின் மகன் அபிக்யான் பட்டேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்க சென்றவர்களை காவல் நிலையத்திலும் அமைச்சரின் மகன் தாக்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
நள்ளிரவில் காவல்நிலையத்தில் பாஜக அமைச்சர் ரகளை:
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகனை விடுவிக்க பாஜக அமைச்சர், காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்தார். மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் நரேந்திர சிவாஜி தனது மகனை மீட்க காவல்நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் பாஜக அமைச்சர் நரேந்திர சிவாஜி நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் மகனை தாக்கியதாக கூறி 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற காவலர்கள் அமைச்சரின் தலையீட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.