புழல்: மாதவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 22 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் 475 வாக்குசாவடிகளில் 22 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், உள்ளன.
ஆகவே மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட மாதவரம் லெட்சுமிபுரம் தொடக்கப்பள்ளி, மாதவரம் லெட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு அடிப்படை உட்கட்டமைப்புகளான குடிநீர் வசதி. கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பட்டு அறையை பார்வையிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், பராமரிப்பு பணி புகார் பதிவேடு, வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் த.பிரபுசங்கர் கூறுகையில், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 475 வாக்கு சாவடிகளில் 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. காவல் துறையுடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். இந்த நிகழ்ச்சியின் போது பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வதஸ், மாதவரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், மாதவரம் வட்டாட்சியர் வெங்கடஜலபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.