திருப்பதி: காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் 16 வயது காதலியுடன் 3 குழந்தைகளின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் கர்நாடக மாநில எல்லை அருகே உள்ள வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ஒரே மரத்தில் சிறுமியும், ஒரு வாலிபரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர். நேற்று அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் புங்கனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், சடலடமாக கிடந்தவர்கள் புங்கனூர் டவுன் என்டிஆர் காலனியை சேர்ந்த கங்கையா(35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.
கங்கையாவுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆனாலும் இருவரும் சந்தித்து வந்ததால் அடிக்கடி இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த கங்கையாவும், அவரது காதலியான சிறுமியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் நேற்றுமுன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்தபடியே கங்கையா தனது அண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை.
எனவே நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். அதன்பிறகு இருவரும் ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 16 வயது காதலியுடன் 3 குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.