போபால்: மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் ரத்தன்பசாய் கிராமத்தை சேர்ந்த ஷிவானி தோமர் (18) என்ற பெண், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் தோமர் (21) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காதல் ஜோடி மாயமானது. காதலனின் தந்தை அளித்த புகாரின் பேரில், அம்பா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே காதல் ஜோடிகளின் உடல்கள் சாம்பல் ஆற்றில் கரை ஒதுங்கி கிடந்தன. தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ெமாரேனா போலீஸ் எஸ்பி ஷைலேந்திர சிங் சவுகான் கூறுகையில், ‘கடந்த 15 நாட்களுக்கு முன் காதல் ஜோடியை அடித்துக் கொன்று முதலைகள் நிறைந்த சாம்பல் ஆற்றில் வீசியுள்ளனர். பெண்ணின் குடும்பத்தார் தான் காதல் ஜோடியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.
உடல்கள் சிதைந்து காணப்படுவதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான், கொலை சம்பவம் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்படும். முதற்கட்ட விசாரணையில் ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் நடந்த ஆணவக் கொலை என்பது தெரியவந்தது’ என்று கூறினார்.