Sunday, June 16, 2024
Home » தாமரை பார்ட்டியில் பணத்தை சுருட்டும் கும்பலுக்கு ‘ஷாக்’ கொடுத்த மெசேஜ் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

தாமரை பார்ட்டியில் பணத்தை சுருட்டும் கும்பலுக்கு ‘ஷாக்’ கொடுத்த மெசேஜ் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘வேட்பாளர் 2 மணி நேரம் காலதாமதமாக வந்ததால டென்ஷனாகி தனியாவே பிரசாரம் செய்தாராமே மாஜி அமைச்சர்’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதி புறநகர் பகுதியில் இலைக்கட்சி வேட்பாளர் கடைசியில் முடியக்கூடிய வேலு என்பவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மாஜி அமைச்சர் விஜயமானவர் காலை 6.30 மணியளவில் வந்தாராம்.. ஆனால் வேட்பாளர் பிரசாரத்திற்கு வருவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுச்சாம்… இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த மாஜி அமைச்சர் டென்ஷனாகி காலை 9 மணியளவில் கட்சியினருடன் தனியாக சென்று இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி பிரசாரத்தில் ஈடுபட்டாராம்.. பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டு எடுத்த பெண்களுக்கு தலா 50 ரூபாய் உடனுக்குடன் நிர்வாகிகள் வழங்கிட்டாங்களாம்… இதனால் உச்சக்கட்ட கோபத்துக்குள்ளான பெண்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்து ஆரத்தி எடுத்த எங்களுக்கு வெறும் 50 ரூபாய் மட்டும்தானான்னு கேட்டு நிர்வாகிகள் வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டுப் போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி அதிமுக ரெண்டு கோஷ்டியாக செயல்படுவதால சேலத்துக்காரர் அதிருப்தில இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி அதிமுகவில் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையை ஏற்று மாநில அமைப்பாளர் அன்பு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் எம்எல்ஏ வையா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இது இல்லாமல், ஓபிஎஸ் தலைமையை ஏற்று முன்னாள் எம்எல்ஏ ஓம் பெயர் கொண்டவர் தனியாக செயல்பட்டு வருகிறாராம்.. புதுச்சேரியில அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக போட்டியிடுகிறது. அன்பு ஆதரவாளர் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறாரு.. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சேலத்துக்காரர் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக வையா தலைமையில் நிர்வாகிகள் பொதுக்கூட்டத்துக்கு வந்தனர். அப்போது வையாவை மேடை ஏறவிடாமல் அன்புவின் தம்பி தலைமையிலான நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம்.. இதனால் மேடைக்கு வெளியே அவர் நின்று கொண்டிருந்தாராம்.. இதை மேடைக்கு வந்தபோது பார்த்த சேலத்துக்காரர் வையாவை மேடைக்கு அழைத்து சென்றாராம்.. இது அன்பு தலைமையிலான அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.. தேர்தல் நேரத்தில் சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிமுகவில் 2 கோஷ்டியாக செயல்படுவதை கண்ட சேலத்துக்காரர், மேடையிலேயே மாநில பொறுப்பாளரான அன்புவை அழைத்து அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு வங்கி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்னு அறிவுறுத்தினாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பணத்தை சுருட்டுவது தெரிந்தா மானத்தை வாங்கணும்னு மெசேஜ் போட்ட தாமரை பார்ட்டில கலக்கத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் களத்தில் தாமரை பார்ட்டிகள் செய்யும் அலம்பலுக்கு அளவே இல்லாம இருக்குதாம்.. இதில் ஒரு சில நிர்வாகிகள் அதிரடியாக பரப்பும் மெசேஜ், சொந்த கட்சிக்காரர்களையே அலற வைக்குதாம்.. இப்படி தான், மாங்கனி மாவட்டத்தில் ஒரு பார்ட்டி அனுப்பியுள்ள மெசேஜ், மண்டல நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்காம்.. ‘சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பணம் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டதா? அப்படி கொடுக்கப்பட்டால், உடனடியா ஒவ்வொரு பூத்துக்கும் பணத்தை பிரித்து கொடுக்க வேண்டும். இதை அனைவரும் கண்காணிக்க வேண்டும். கடந்த அசெம்ப்ளி எலக்சனில் ஒரு சில நிர்வாகிகள், இப்படி வந்த பணத்தை சுருட்டிக்கிட்டாங்க.. இந்த தேர்தலில் யாராவது சுருட்டுவது உங்களுக்கு தெரியவந்தால், அவருடைய பெயர் மற்றும் வண்டவாளத்தை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து மானத்தை வாங்க வேண்டும்’ என்பதுதான் அந்த மெசேஜாம்.. இது என்னடா புதிய சர்ச்சையா இருக்குன்னு மூத்த நிர்வாகிங்க கலக்கத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொத்து பட்டியலை தெரிஞ்சிக்க போட்ட திட்டம்னு சொல்றாங்களே.. மேட்டர் என்ன..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதிமுக கூட்டணியில இடம் பிடிச்சி, எப்படியாவது தனது குடும்பத்தோடு இணைந்திருக்கும் மாஜிக்கு மாங்கனி தொகுதிய வாங்கி கொடுத்திடணுமுன்னு மாம்பழ கட்சியோட இரண்டாமவர் ரொம்ப ஆர்வமா இருந்தாரு.. இதற்காக தொடர் பேச்சுவார்த்தையும் தீவிரமா நடந்துச்சு… தனது சொந்த தொகுதியை விட்டுக் கொடுத்தாவது மாம்பழ கட்சியை இழுத்திடணுமுன்னு இலைக்கட்சிக்காரர் எவ்வளவோ முயன்றாரு.. ஆனா என்ன மாயமோ திடீரென இரண்டாமவர், மலராத கட்சியோட இணைஞ்சிட்டாரு. இந்நேரத்துல அந்த மாஜிக்கோ உடல்நலம் சரியில்லாம போயிட்டு. ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டாரு. வேட்புமனு கடைசி நாளில், கடைசி நிமிடத்தில் மாம்பழ கட்சியோட மாற்று வேட்பாளர் நான் என கூறி அட்மிட்ல இருந்த அந்த மாஜி வேட்புமனு தாக்கல் செஞ்சாரு. ஆபரேசன் செஞ்ச நிலையில், உடல் முழுவதும் பாதுகாப்பு கருவிகளை மாட்டிக்கிட்டு நடக்க முடியாமல் ஏன் மனு தாக்கல் செய்யணுமுன்னு கட்சிக்காரங்களே அவர பார்த்து கேள்வி மேல கேள்வி கேட்டிருக்காங்க. ஆனாலும் அவரால் பதில் சொல்ல முடியலயாம். ஆனா கட்சிக்காரங்களோ இன்னொன்னையும் சொல்றாங்க.. தலைவரின் குடும்பத்தினருக்கும் மாஜிக்கும் மிகவும் நெருங்கிய நட்பு இருக்கு. மாஜியோ பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்றாரு. மாஜிக்கிட்ட எவ்வளவு சொத்து தேறும் என்பதை கண்டுபிடிக்க போட்ட திட்டமா இருக்குமுன்னு பேசிக்கிறாங்க.. அதேபோல வழக்கு ஒன்றில் மாஜி சிக்கியிருக்காராம்.. அதிலிருந்து வெளியே வர இந்த மனுதாக்கல் உதவுமுன்னும் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

thirteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi