Saturday, May 4, 2024
Home » இதுவும் தேவை.. இன்னமும் தேவைதான்னு புலம்பும் தாமரை வேட்பாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இதுவும் தேவை.. இன்னமும் தேவைதான்னு புலம்பும் தாமரை வேட்பாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘கடைசி மூன்று நாளில் பூவுக்கு முக்கிய நிர்வாகிங்க விலைபோயிட்டாங்கன்னு இலைக்கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்களாமே எங்க தெரியுமா?.. எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் தொகுதியில் பூ சின்னத்தில கூட்டணி கட்சியான மூன்று எழுத்துக்காரர் போட்டியிட்டார். ஏற்கனவே 2 முறை தோல்வி அடைந்ததால், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும்னு கட்டாயத்தில் இருந்து வந்தார். கடைசி வரை நாங்களும் போட்டியில இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் வகையில் இருந்த இலைக்கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு கடைசி 3 நாட்கள் அப்படியே அமைதியாயிட்டாங்களாம்..

யார் எங்கு இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாத நிலைக்கு போயிட்டாங்களாம்.. இதனால பூக்காரருக்கு இலைக்கட்சிக்காரங்க விலை போயிட்டாங்க.. அதற்கேற்ப வேகமாக செயல்படும் இலைக்கட்சியினரை மடக்கி வைட்டமின் ‘ப’ கொடுத்து அமைதியாக்கிட்டாங்கன்னு சமூக வலைதளங்களில் வேகமா பரவியது. தேர்தல் அன்றைக்கு கூட முக்கிய நிர்வாகிங்க சென்ற இடமெல்லாம் நம்ம கட்சியை விட பூ கட்சிக்கு எப்படி வெற்றி வாய்ப்பு இருக்கும்னே விசாரிச்சிட்டிருந்தாங்களாம்..

இதை பார்த்த இலைக்கட்சிக்காரங்க நம்ம கட்சிக்கு வேலை செய்வதை விட வாங்கின காசுக்கு நல்லாத்தான் கூவுறாருன்னு கமென்ட் அடிச்சிங்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் முடிவுக்கு பிறகு மாஜி அமைச்சரின் நிலைமை என்னாகுமோன்னு கிண்டல் அடிக்கிறாங்களாமே நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர் மணியானவரின் ஆதரவாளரான கடைசி பாதியில் முடியக்கூடிய சங்கர் என்பவர் இலைக்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கட்சியில் உள்ளவர்களையும் மதிக்கல… கூட்டணி கட்சியில் உள்ளவர்களையும் மதிக்கல… இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது கூட வேட்பாளருடன் யாரும் உடன் செல்லவில்லை. மாஜி அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுதான் சென்றனர். நம்மளை மதிக்காதவர் தேர்தலில் வெற்றி பெறவே கூடாதுன்னு வேட்பாளருக்கு எதிராக சொந்த கட்சியினரே செயல்பட்டாங்களாம்.. இந்த தகவல் தேர்தலுக்கு பின்னர் மாஜி அமைச்சருக்கு தெரிய வந்திருக்கு..

இதனால் உச்சகட்ட கோபத்தில் இருந்து வரும் மாஜி அமைச்சர், பொது இடங்களில் நிர்வாகிகளை பார்க்கும் போது பொது இடங்கள்னு கூட பார்க்காமல் பயங்கரமாக கடிந்துகொள்கிறாராம்.. பதிலுக்கு அவர்களும் மாஜி அமைச்சரை பொது இடங்களில் பார்த்தால் பெயரளவுக்கு சலாம் மட்டும் போடுகிறார்களாம்… மற்றப்படி பேசுவது கிடையாதாம்.. இதனால் மாஜி அமைச்சர் டென்ஷனாக இருக்கிறாராம்.. தேர்தலுக்கு பின்னர் மாஜி அமைச்சர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தலைமையிடத்திற்கு சென்றுள்ளதால் தேர்தல் முடிவுக்கு பிறகு மாஜி அமைச்சரின் நிலைமை என்னாகுமோ என்பதை இப்போதே சொல்லி நிர்வாகிகளுக்குள் கிண்டலடித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தலைமை ஒதுக்கிய பணம் யார் யாருக்கு போனதுன்னு வெள்ளை அறிக்கை கேட்டு வாட்ஸ்அப்பில் குடைச்சல் கொடுக்கிறாங்களாமே தாமரைக்கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல தாமரை கட்சியில் தேர்தலுக்கு பிறகு நிர்வாகிகளின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்.. இதில் மாங்கனி சிட்டியில் அந்த கட்சியின் நிர்வாகிகள் பதிவிடும் வாட்ஸ்அப் தகவல்கள் புதிய சர்ச்சையை கிளப்பிக்கிட்டு இருக்காம்..

நம்ம மாவட்டத்திற்கு கட்சி தலைமை எவ்வளவு தேர்தல் நிதி ஒதுக்கியது, அதில் மாநகர நிர்வாகிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, அணி பிரிவு தலைவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு மண்டல தலைவருக்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டது, மண்டலத்தில் உள்ள காரிய கர்த்தாக்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்னு விடாமல் கூவிக்கிட்டே இருக்காங்களாம் நிர்வாகிகள்..

இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்காம்.. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தலைவரின் வீட்டில் ரெய்டு நடந்ததாம்.. அப்போது கட்சி தலைமை அனுப்பிய பணம்தான் வந்து சேர்ந்துள்ளதுன்னு பரவலாக பேச்சு எழுந்ததாம்.. ஆனால் எங்கிருந்தோ வந்த தொலைபேசியால் ஒன்றுமில்லைன்னு அதிகாரிகள் திரும்பி போயிட்டாங்களாம். அப்போது நடந்த தகிடுதத்தங்கள் அம்பலமானதால்தான், இப்போது வாட்ஸ்அப் மெசேஜ் பறந்து கிட்டே இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பல நூறுகோடி சுருட்டிய நிதிநிறுவன சிக்கல்காரரிடம் தேர்தல் செலவு பணத்தை தாமரை கட்சி நிர்வாகிங்க சுருட்டிட்டாங்களாமே?..’’ என கேட்டார் விக்கியானந்தா. ‘‘வடமாநில நதி பெயர் கொண்ட நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சி சார்பில் தொகுதிக்கு தொடர்பே இல்லாத வேட்பாளர் களமிறக்கப்பட்டார். இந்த தொகுதியோடு தென்மாவட்ட தொகுதிகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு அவர் களமிறக்கப்பட்டாராம்.. தனது தொகுதியில் செலவு செய்வதற்காக கொடுத்த பணத்தை, தாமரைக்கட்சி நிர்வாகிகளே சுருட்டி விட்டனராம். செலவு செய்ததாக கூறிய பல கோடி ரூபாய்க்கு இதுவரை கணக்கே வரவில்லையாம்..

பணம் என்ன ஆனதுன்னு கேட்டால் நிர்வாகிகள் புன் சிரிப்பு சிரிக்கின்றனராம்.. போட்டியிட்ட இந்த தொகுதி நிலையே இப்படி இருக்கும்போது, மற்ற தொகுதிகளுக்கு கொடுத்த பணத்தோட நிலை என்ன என வேட்பாளர் யோசிக்க தொடங்கி விட்டாராம்.. ஏற்கனவே, நிதி நிறுவன பணம் பல நூறு கோடி சுருட்டலில் சிக்கி வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலையில், தேவையில்லாமல் அரசியலில் நுழைந்து, அதுவும் தாமரைக்கட்சி சின்னத்துல நின்ன எனக்கு இதுவும் தேவைதான். இதற்கு மேலும் தேவைதான்னு பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி புலம்பி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

19 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi