பிலாஸ்பூர்: 250 ஆண்டுகாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததைவிட 9 ஆண்டு மோடி ஆட்சியில் தான் நாட்டில் அதிகளவு கொள்ளை நடந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர், பிலாஸ்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்,‘‘ டெல்லி மக்களுக்கு இலவச திட்டங்களை நான் வழங்குவதால் மோடி என் மீது கோபமாக உள்ளார். ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக பல நல திட்டங்களை அறிவித்தேன். அதனால் என் மீது மோடிக்கு கோபம். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியில் கூட பால் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் உணவு பொருட்கள் மீது வரி விதித்தது இல்லை. டீத்தூள்,காபி,பால்,எண்ணெய் உள்ளிட்டவற்றை கூட மோடி விட்டு வைக்கவில்லை. பால், வெண்ணெய்க்கு வரியை விதித்து அந்தபணத்தை தனது நண்பர்களுக்கு அளிக்கிறார். தன்னுடைய தொழிலதிபர் நண்பர்களின் ரூ.11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். பிரிட்டிஷாரின் 250 ஆண்டு ஆட்சியில் நடந்ததை விட மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் நடந்த கொள்ளை அதிகம். காங்கிரஸ் ஆட்சியில் கூட இது போன்று நடந்தது இல்லை’’ என்றார்.