சண்டிகர்: தேசிய லோக் தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர் நபே சிங் ரத்தீ(70). முன்னாள் எம்எல்ஏவான இவர் தனது சொகுசு காரில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். டெல்லி அருகிலுள்ள பகதூர்கரில் காரை வழிமறித்த மர்ம ஆசாமிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில், குண்டுகள் பாய்ந்த ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நபே சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் அந்த கட்சி நிர்வாகி ஒருவரும் பலியானார். நபே சிங்கின் தனி பாதுகாவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
நபே சிங் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜ ஆளும் அரியானாவில் இன்றைக்கு யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபிநதர் சிங் ஹுடா தெரிவித்தார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் அபே சவுதாலா கூறுகையில், நபே சிங்கின் கொலைக்கு தார்மீக பொறுப்பேற்று அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.