கராச்சி: பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சிந்து மாகாண சட்டப்பேரவை துணை சபாநாயகராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற 157 உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 114 உறுப்பினர்களும் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எம்க்யூஎம்-பி கட்சி 36 உறுப்பினர்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
உறுப்பினர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடந்தது. இதில் பிபிபி கட்சியின் மூத்த தலைவர் சையத் ஓவைஸ் ஷா 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை சபாநாயகராக பிபிபி கட்சியின் கிறிஸ்தவ தலைவரான அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் முஸ்லீம் மதத்தை அல்லாத ஒருவர் துணை சபாநாயகர் ஆவது இதுவே முதல் முறை. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நவீத் உருது மொழியில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கான தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது.