புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் புலான்ஷாகரில் நாளை பிரதமர் மோடி தனது முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக பாஜ தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் பணிகளில் இந்தியா கூட்டணி, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் அயோத்தியில் ராமர் கோயில் திறந்து வைத்துள்ள நிலையில் அதன் தாக்கம் அடங்குவதற்குள் பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை தொடங்க உள்ளதாக பாஜவின் அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள புலான்ஷாகர் மாவட்டத்தில் உள்ள நவாடா கிராமத்தில் தனது முதல் பிரசாரத்தை பிரதமர் மோடி நாளை தொடங்க உள்ளார்.
2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 8ல் பாஜ வெற்றி பெற்றது. மேலும், பாஜவிற்கு அந்த மாவட்டத்தில் அதிகளவு செல்வாக்கு உள்ளதாக அந்த கட்சி கருதுகிறது. இதனால்தான் பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை இங்கிருந்து தொடங்குகிறார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக மிகபெரிய பேரணியை நடத்தவும் அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதில், 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.