வாஷிங்டன்: வரும் மக்களவை தேர்தல் மூலம் மோடி மீண்டும் இந்திய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று ஹாலிவுட் நடிகை மேரி மில்பென் தெரிவித்தார். அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்க ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரி மில்பென் அளித்த பேட்டியில், ‘இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் அதிகளவில் ஆதரவு உள்ளது. அமெரிக்கா – இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறந்த பங்காற்றி வரும் தலைவராக மோடி விளங்குகிறார். மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார். இந்தாண்டு அமெரிக்காவிலும் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்தியாவிலும் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது.
உலகிற்கும் மிக முக்கியமான தேர்தல் காலமாக அமெரிக்க, இந்திய தேர்தல்கள் இருக்கும். ஒவ்வொரு இந்திய குடிமகனும், தங்களது குரலையும் வாக்கையும் அளிக்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்முவை நியமனம் செய்தது, ஒன்றிய அமைச்சரவையில் பெண் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஆகியன மோடியின் தலைமைப் பண்புக்கு உதாரணமாக விளங்குகிறது. இந்தியாவில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை அவர் ஊக்குவித்து வருகிறார். மோடியின் கொள்கைகள் இந்தியாவை பொருளாதார ரீதியாக புதிய இலக்கை அடைய செய்யும் என்று நம்புகிறேன். அமெரிக்காவைப் பொறுத்தவரை, டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.