தஞ்சை: தஞ்சையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு கூட்டம் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். எடப்பாடி முதல்வராக இருந்தபோது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்ததாரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. கட்சிக்காரர்களை எடப்பாடி சந்திக்கவே இல்லை. அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடியை தவிர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள்.
வழக்கு நிலுவையில் உள்ளதால் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை முடங்கி விடும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிடுவோம் என்கிறார். மோடியுடன் கூட்டணி இல்லை எனக் கூறும் எடப்பாடி, ஜெயலலிதா இந்த லேடியா – மோடியா என்றாரே, அது போல் இந்த எடப்பாடியா – மோடியா என்று கூற தைரியம் உண்டா? எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது. எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மட்டுமே 40 தொகுதிகளும் வெற்றி பெற முடியும்.