டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்று வரும் 9.5கோடி குடும்பங்கள் கூடுதல் மானியத்தால் பயன்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ஒன்றிய அரசு ரூ.200 மானியம் கொடுத்து வந்தது. ரூ.200 மானியம் காரணமாக ரூ.1,118 விலையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.918க்கு பெற்று வந்தனர். ஆகஸ்ட் 30ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
அனைத்து சிலிண்டர்களுக்கும் அறிவிக்கப்பட்ட விலைக்குறைப்பால் உஜ்வாலா திட்டத்தினரும் பயனடைந்தனர். உஜ்வாலா திட்டப் பயனாளிகள் பெறும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியத்தை அக்டோபர் 4ல் அரசு அறிவித்தது. மக்களவை தேர்தல் 7 மாதத்தில் வர உள்ளதால் அதற்குள் சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.200 விலைக் குறைப்பு காரணமாக உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.718ஆகக் குறைந்தது. அக்டோபர் 4ல் அறிவித்த கூடுதல் மானியத்தால் உஜ்வாலா திட்டத்தில் தரப்படும் சிலிண்டர் விலை ரூ.618ஆகக் குறைந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பாஜக தோற்றால் கேஸ் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.