சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் தனிச்செயலாளர் திரு.என்.முருகானந்தம் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தற்போது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழல் கருதியும், சிறு-குறு வணிகர்களுக்கான வணிக அழுத்தம் காரணமாகவும், அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் சிறு,குறு வணிகர்கள் இந்த முத்திரைக் கட்டண உயர்வையும், அபராதக் கட்டண உயர்வையும் அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை முறையான இன்வாய்ஸ் ரசீதோடு வாகனங்களில் கொண்டு செல்லும்போது, அதில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்தால் கூட, பல மடங்கு அபராதம் விதிக்கப்படுவதால், வணிகர்கள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனை அதிகாரிகளிடம் கூறும்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறி, சிறு தவறுக்குக்கூட அதிக அளவு அபராதத்தினை விதிக்கிறார்கள். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகளுக்கான வாடகை முறைப்படுத்த வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக சில்லரை வணிகம் செய்துவரும் சிறு கடை வியாபாரிகள், அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி பணிகள், நெடுஞ்சாலை விரிவாக்கம், மெட்ரோ பணிகள் மூலம் பாதிக்கப்படாமல், பணிகள் முடிக்கப்பட்டவுடன், கடை வைத்திருப்பவர்களுக்கே மீண்டும் கடைகளை இன்றைய வாடகை விகிதப்படி நேராய்வு செய்து திருப்பி அளித்திட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.