கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த 2023 மார்ச் 31ம் தேதிப்படி ஒன்றிய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன் உள்ளதாகவும், இது ஜிடிபியில் 57.1 சதவீதம் என்றும் தெரிவித்திருந்தார். வரும் மார்ச் 31ம் தேதிப்படி இது ரூ.168,72,554.16 கோடியாக உயரும். அடுத்த நிதியாண்டில் புதிதாக ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசின் கடன் ரூ.183,67,132.46 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு இந்தியர்கள் தலையிலும் ரூ.1.31 லட்சம் கடன் உள்ளது. பிறக்கும் குழந்தைகள் கூட கடன் சுமையுடன்தான் பிறக்கின்றன. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2014 மார்ச் 31ம் தேதிப்படி ஒன்றிய அரசின் கடன் ரூ.55.87 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கடன் ரூ.127.8 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.