Friday, May 17, 2024
Home » பொது சிவில் சட்டத்தில் தகாத உறவுகளுக்கு சிக்கல்; ‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை: உத்தரகாண்ட் அரசு கொண்டு வந்த மசோதாவில் தகவல்

பொது சிவில் சட்டத்தில் தகாத உறவுகளுக்கு சிக்கல்; ‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை: உத்தரகாண்ட் அரசு கொண்டு வந்த மசோதாவில் தகவல்

by Suresh

புதுடெல்லி: உத்தரகாண்ட் அரசு கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டத்தின்படி, ‘லிவ்-இன்’ உறவை பதிவுசெய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ₹25,000 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தேவையான ஆலோசனைகளை ஒன்றிய சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநில அரசு, நேற்று சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தைத் தாக்கல் செய்தது. இந்த மசோதா அவையில் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் லிவ்-இன் உறவுக்கு (திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் – பெண் சேர்ந்து வாழ்தல்) கடுமையான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக வெளியான தகவலில், பொது சிவில் சட்டம் அமலானதும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள், அல்லது புதிதாக அத்தகைய உறவில் ஈடுபட இருப்பவர்கள் கட்டாயம் அரசிடம் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.மேலும், இந்த உறவில் இருப்பவருக்கு 21 வயது கடந்திருக்க வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஒழுக்கத்துக்கு எதிராகவோ அல்லது இருவரில் ஒருவர் முறையாக அரசுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டாலோ, அல்லது மற்றொரு உறவிலிருந்தாலோ, அல்லது இருவரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

லிவ்-இன் உறவின் விபரங்களை ஏற்றுக்கொள்வதற்கு தனியாக இணையதளம் ஏற்படுத்தப்படும். விவரங்கள் மாவட்டப் பதிவாளரால் சரிபார்க்கப்படும். அவர் விசாரணை நடத்துவார். அதற்காக, அவர் இருவரையோ அல்லது அவர்களின் பெற்றோர் உட்பட வேறு யாரையும் அழைக்கலாம்.

ஒரு வேளை அவர்களின் பதிவு நிராகரிக்கப்பட்டால், பதிவாளர் தனது காரணத்தை எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். லிவ்-இன் உறவு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அல்லது தவறான தகவல்களை வழங்கினால், மூன்று மாதங்கள் சிறை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் லிவ்-இன் உறவு குறித்து பதிவுசெய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fourteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi