சென்னை: பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியது மனித இனத்தை அவமானப்படுத்தும் செயல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் பட்டியல் இன இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய பட்டியலின இளைஞர்கள் இருவரை 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தியும், இவர்கள் மீது சிறுநீர் கழித்தும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வன்கொடுமை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் சாதிய வன்முறைகளை தடுத்திட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அறிக்கையில், நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது.
இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியது மனித இனத்தை அவமானப்படுத்தும் செயல். கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து, அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், தாக்குதல் நடத்தியவர்களின் பின்னணியில் உள்ளவர்களை விசாரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.