மொடக்குறிச்சி: அரச்சலூர் அருகே பட்டியலின தம்பதியை தாக்கிய வழக்கில் பாஜ கவுன்சிலர் உள்பட 4 பேரை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கோகிலா (38). இவர்களது மகன் ரமணிச்சந்திரன் (21). கல்லூரி மாணவரான இவர் கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்து தருவது குறித்து அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு கவுன்சிலர் கவின்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிகிறது. அப்போது அவரது செல்போனை அவரது மனைவி எடுத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜவை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் கவின்குமார் உள்ளிட்ட 3 பேர் ரமணி சந்திரனின் வீட்டிற்கு சென்று செல்போனில் அவரது மனைவியிடம் பேசியது குறித்து கேட்டுள்ளார். பின்னர் ரமணிச்சந்திரன் அவரது தாய் கோகிலா, தந்தை சண்முகம் ஆகிய மூன்று பேரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கோகிலா கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரச்சலூர் பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், பாஜ மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான கவின்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் கவின்குமார் (28), அதே பகுதியை சேர்ந்த குமார் (33), பரமேஷ்வரன் (27), பிரபு (41) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார் அவர்களை கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.