மேட்டூர்: பட்டியலின் வாலிபருக்கு முடி வெட்ட மறுத்த கடைக்காரர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கிழக்கு காவேரிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (32). இவர் இரு தினங்களுக்கு முன்பு காவேரிபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவரின் முடி திருத்தும் கடைக்கு சென்று, தனக்கு முடி வெட்டும்படி கூறியுள்ளார். அதற்கு கடை உரிமையாளரான ரமேஷ் என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவருக்கு முடி வெட்ட முடியாது என்றும், முடிவெட்டினால் மற்ற ஜாதியினர் தனது கடைக்கு வர மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு இளையராஜா கொளத்தூர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, சலூன் கடை உரிமையாளர் ரமேஷ் மீது கொளத்தூர் போலீசார் தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.