சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள முருகன், பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்துள்ளதால் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளோம். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. நாளை அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு பதினோரு முப்பது மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.