Friday, May 31, 2024
Home » அறிவுத்தீ பரவட்டும்

அறிவுத்தீ பரவட்டும்

by Mahaprabhu

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் மதுரைச்சீமையின் புதுநத்தம் சாலையில், புதிய சரித்திரத்தின் அடையாளமாய் வானுயர்ந்து நிற்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம். 2.13 லட்சம் சதுரடி பரப்பளவில், ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் இதனை நமக்கு உருவாக்கி தந்துள்ளது தமிழ்நாடு அரசு. இப்படி பிரமிப்பின் பிம்பமாக திகழும் கலைஞர் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது 3.5லட்சம் புத்தகங்கள். ‘வெறுமனே பார்த்தால் இது காகிதம். ஆழ்ந்து படித்தால் அதுவே அறிவு வளர்க்கும் ஆயுதம்,’’ என்பது சிறந்த நூல்களுக்கான எளிய ஒப்பீடு. இந்த வகையில், தமிழ் நிலத்தில் பகுத்தறிவை விதைத்து, சுயமரியாதையை ஆல விருட்சமாய் வளர்த்தெடுத்த கலைஞரின் கரங்கள் படைத்த நூல்கள், காலத்தால் அழியாதவை. அவர் உருவாக்கி தந்த நூலகங்கள் அனைத்தும், இன்றளவும் அறிவு வளர்க்கும் பொக்கிஷங்கள். இதன் நீட்சியாக சிங்கப்பூர் தேசிய நூலகத்தால் ஈர்க்கப்பட்ட கலைஞர், 2010ம் ஆண்டு தலைநகராம் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார். பரந்த சேகரிப்புகள் விரிந்து கிடக்கும் அந்த அரிய நூலகம், இப்போது ஆயிரக்கணக்கான வாசகர்களின் பெருமைக்குரிய புகலிடமாக காட்சியளிக்கிறது.

இந்தியாவில் எந்த நகரிலும் இதுபோன்ற நூலகங்கள் இல்லை என்பது, இதுவரை தமிழ்நாட்டிற்கான தனிப்பெருமையாக இருந்தது. அதை விஞ்சும் வகையில், தற்ேபாது முத்தமிழ் நர்த்தனமிடும் மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நூலகம் தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம். வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய சான்றாதாரக் களஞ்சியம் என்றால் அது மிகையல்ல. இங்குள்ள அரியநூல்கள் பிரிவில், 1918ம் ஆண்டு வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழ்களும், திராவிட இயக்க தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்களும் இடம்பெற்றுள்ளன. இதேபோல், 1824ல் வெளிவந்த சதுராகதி முதல் பதிப்பு லண்டன் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் மட்டுமே உள்ளது. அதற்கடுத்து தற்போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டுமே இடம் பெற்றுள்ளது இதற்கான சாட்சியம். இதுமட்டுமன்றி குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராவோர், மூத்த குடிமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகச் சாலை வேண்டும் என்று அண்ணா சொன்னார்.

அதேபோல் ஒவ்வொரு நகரத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் புத்தகச் சாலை வேண்டும் என்ற கொள்கையின்படி இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி என்று, அண்ணா நூலகத்தை திறந்து வைத்த போது நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார் கலைஞர். இந்த வகையில், கலைஞரின் பெயர்சூடி நிற்கும் நூலகத்தை, மக்களுக்கு அர்ப்பணித்து முதல்வர் ஆற்றிய உரையும் அளப்பரியது. படிப்பு மட்டும் தான் யாரும் திருடமுடியாத ஒரே சொத்து. இதற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் கலைஞர். கால் பதித்த துறைகளில் எல்லாம் முதன்மையானவர் கலைஞர். அவரே ஒரு நூலகம் என்று குறிப்பிட்டார் முதல்வர். ‘‘புத்தகத்தில் உலகை படிப்போம். உலகை புத்தகமாக படிப்போம்,’’ என்று கலைஞரின் வரிகளால், அவர் உரையை நிறைவு செய்ததும் கவனம் ஈர்த்தது. கலைஞர் நமக்கு தந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கி ெகாண்டிருக்கிறது. அந்த வழியில் முதல்வர் தந்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து அறிவுத்தீ பரப்பும் என்பது நிதர்சனம்.

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi