பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ் தனியார் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சிவசங்க கருவாள். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவருக்கு மிலாந்தி தேவி என்ற மனைவியும், நான்சியை (3) என்ற மகளும் உள்ளனர். தம்பதியினர் வேலைக்கு செல்லும்போது தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நான்சியை விட்டுவிட்டு செல்வது வழக்கம். நேற்று மாலை 3 மணி அளவில் பணி முடிந்தவுடன் மிலாந்தி தேவி தனது மகளை காப்பகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தாக்கி வாயில் கவ்விக் கொண்டு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பதுங்கியது.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை தேடி தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றனர். அப்போது சிறுமி துடிதுடித்த நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பந்தலூர் சுற்று வட்டாரத்தில் இரு வாரத்தில் சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று சிறுமி பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பந்தலூர் பஜாரில் அனைத்து கடைகளையும் அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேங்கோரேஞ், அய்யம்பள்ளி, சேரம்பாடி ஆகிய பகுதிகளிலும் மக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். இதேபோல், பந்தலூர் அருகே உள்ள படசேரி ஏலக்குமார் என்பவரது மனைவி மஞ்சுளா (27) வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை தாக்கியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.