Monday, April 29, 2024
Home » சிம்ம ராசிக் குழந்தையை வளர்ப்பது எப்படி?

சிம்ம ராசிக் குழந்தையை வளர்ப்பது எப்படி?

by Lavanya

உங்கள் குழந்தை சிம்ம ராசியில் பிறந்துவிட்டால் தாய்மார்களே… நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டிலிருந்து குழந்தையை வளர்ப்பது சாலச் சிறந்தது. ஏனென்றால் சிம்ம ராசி குழந்தைக்கு, 24 மணி நேரமும் கவனிப்பு அவசியம். பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அம்மா வீட்டில் இருக்கும் போதும் அந்த குழந்தைக்கான உணவு, உடை, விளையாட்டுப் பொருட்கள், பிராஜெக்ட் தொடர்பான விஷயங்கள், அன்று குழந்தை வாசிக்க வேண்டிய கதைகள், சொல்ல வேண்டிய கருத்துக்கள் என்று வீட்டிலிருந்து நிறைய தயார் செய்ய வேண்டும். அவ்வாறு உழைத்தால் மட்டுமே சிம்ம ராசிக் குழந்தைக்கு வெற்றி தரும் பெற்றோராக விளங்க முடியும்.

அம்மாவுக்கு ஹோம் வொர்க்

சிம்ம ராசி குழந்தை, தன் பெற்றோருக்கு நிறைய ஹோம் வொர்க் கொடுத்துவிட்டுத்தான் போவார்கள். அவர்கள் வந்தவுடன், அம்மா எனக்கு இதை செய்து வைத்திருக்கிறீர்களா? அதை தயாராக வைத்திருக்கிறீர்களா? என்று வரிசையாக நான்கு விஷயங்களை கேட்பார்கள். அந்த நான்கும், செய்து முடிக்க அம்மாவுக்கு நான்கு மணி நேரம் ஆகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராட்டு

சிம்ம ராசி குழந்தைக்கு, உயிர் மூச்சு என்பதே பாராட்டுதான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலுக்கும், பெரிய சாதனைக்கும், அவர்கள் எதிர்பார்ப்பது பாராட்டு மட்டுமே. இவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் பொன்மஞ்சள். அதிர்ஷ்ட நாள் ஞாயிற்றுக் கிழமை.அனைவரையும் கவரும் குழந்தை
சிம்ம ராசிக் குழந்தை, இருக்கும் இடமே ஜெகஜோதியாக இருக்கும். அந்த குழந்தை எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் தெய்வக் குழந்தை போலவும், ஞானக் குழந்தை
போலவும், அதனை எல்லோரும் பாராட்டுகின்ற விதத்தில் நடந்துகொள்வார்கள். கூட்டங்கள் நடந்தால், மேடையேறி பாடவும், பேசவும் செய்வார்கள். தன்னை புறக்கணிப்பதையோ, அலட்சியப்படுத்துவதையோ ஒரு சிறு குழந்தைதானே அதற்கு என்ன தெரியப் போகிறது என்று அதை பொருட்படுத்தாமல் இருப்பதை, சிம்ம ராசி குழந்தையால் பொறுத்துக் கொள்ள முடியாது.

கோபமும் பாசமும்

சிம்ம ராசி குழந்தை, கோபப்படுமே தவிர, தேம்பி அழவோ மனம் உடைந்து போகவோ செய்யமாட்டார்கள். மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தாலும்கூட, அதை வெளியே காண்பிக்கமாட்டார்கள். சிம்ம ராசிக் குழந்தைக்கு இருக்கும் ஒரே பசி, உணவுப் பசி அல்ல, அன்புப் பசி. தாயாரிடம் மிகுந்த பாச
முடைய சிம்ம ராசிக் குழந்தை, எப்போதும் தன் தாயார் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும், மற்ற குழந்தைகளை கவனிக்க கூடாது என்று எதிர்பார்க்கும் அளவுக்கு பொசஸ்சிவாக இருப்பார்கள்.

கௌரவம்

சிம்ம ராசிக் குழந்தையை பலர் முன்னிலையில் திட்டவோ, கண்டிக்கவோ, அடிக்கவோ கூடாது. பாராட்ட மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் காதுக்குள் ‘இப்படி செய்யாதே பாப்பா’ என்று சொன்னால், உடனே கேட்டுக் கொள்வார்கள். மற்றவர்கள் முன்பு அவர்களுடைய சாதனைகளையும், சவால்களையும் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அவர்கள் மார்க் குறைவாக எடுத்தது போன்ற விஷயங்களை சொல்லவேக்கூடாது.

நேர்மை

சிம்ம ராசி குழந்தை, உண்மையான நேர்மையான குழந்தையாக இருப்பார்கள். புறம் சொல்லாது, எதையும் நேருக்கு நேரே முகத்தில் அடித்ததைப் போல் சொல்லிவிடுவார்கள். பெரியவர்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். சிம்ம ராசி குழந்தையின் முன்பு பெரியவர்கள் தவறு செய்யவோ புறம் பேசவோ கூடாது. ஒழுக்கம், கட்டுப்பாடு, இனிய சொற்கள் ஆகியன சிம்ம ராசிக் குழந்தையின் விருப்பங்கள் ஆகும்.

விளையாட்டு

மிகுந்த மன உறுதி படைத்த இக்குழந்தை, எந்த வேலையையும் அதிக மெனக்கெடல் இன்றி மிகவும் சிறப்பாகவும், அழகாகவும், கலை நயத்தோடும் செய்வார்கள். மிகுந்த கற்பனை வளமும் செயல் திறனும் உடைய குழந்தை, விளையாட்டுக்களிலும் தன்னுடைய பொழுதுபோக்குகளிலும் இதன் கற்பனை வளத்தை காண்பிப்பார்கள். வளர்க்க ஒருவர் போதாது

24 மணி நேரமும் இக்குழந்தை உற்சாகமாக இருக்க விரும்புவதால், இக்குழந்தையின் தந்தையும், தாயும் இக்குழந்தையை வளர்ப்பதில் 24 மணி நேரமும் குழந்தைக்காக உழைக்க வேண்டும். ஒருநாள், தனக்கு இந்த வகுப்பில் சேர வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த வகுப்பு எங்கே நடைபெறுகிறது என்று தந்தை தேடிப் பார்த்து அங்கே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். தாயார், அந்தக் குழந்தையைத் தினமும் வகுப்பில் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்ப அழைத்து வரவேண்டும். இந்த குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு தாய் தந்தை என இருவர் போதாது. வீட்டில் வேறு யாராவது பெரியவர்களோ அல்லது வேலைக் காரர்களோ இருந்தால், நலம்.சிம்ம ராசி குழந்தையை வளர்ப்பது என்பது இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பெரிய கடமையாகவும், பொறுப்பாகவும் பெரியவர்களுக்கு அமையும். இவ்வாறு வளர்த்தால் இக்குழந்தை நாட்டின் மிகச் சிறந்த குடிமகனாக வளர்ந்து பேரும் புகழும் பெறுவார்கள்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

 

You may also like

Leave a Comment

5 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi