Friday, May 17, 2024
Home » லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்புகளுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்புகளுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

சென்னை: லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த கடனை செலுத்தியது.

இது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல், உத்தரவாதத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தரமாக டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படியும் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என்று தடைவிதித்து உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like

Leave a Comment

18 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi