காஞ்சிபுரம்: நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு யாருடைய படங்களையும் வைக்க கூடாது என உயர் நீதிமன்ற பதிவாளர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றங்களில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருடைய உருவ படத்தையோ சிலையையோ வைக்க கூடாது என மறைமுகமாக உயர் நீதிமன்ற பதிவாளர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பதிவாளர் சுற்றறிக்கையை கண்டித்தும், நீதிமன்றங்களில் அம்பேத்கருடைய படத்தையும், உருவ சிலையையும் அமைக்க அனுமதிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களின் திடீர் சாலை மறியல் காரணமாக காஞ்சிபுரத்தின் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று கவன ஈர்ப்பு மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து நடைபெற்றது. அப்போது, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செய்யூர், திருக்கழுகுன்றம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்றங்களில் அகற்றிய அம்பேத்கர் திருவுருவ படத்தை மீண்டும் வைக்க வலியுறுத்தியும்,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் படம் நீதிமன்றத்திலிருந்து அகற்ற கோரும் சென்னை உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வன்முறையை கண்டித்தும், வழக்கறிஞர்களை பாதிக்கும் இ- பில்லிங் (e-filling) முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், ஆலந்தூர், மதுராந்தகம், காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, செஞ்சி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், திருக்கழுகுன்றம் மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருப்போரூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், முன்சீப் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்திலும் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் உள்ளிட்ட மற்ற தலைவர்களின் படங்களை வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதற்கு அனைத்து மாவட்ட வழக்கறிஞர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று திங்கட்கிழமை நீதிமன்றங்கள் திறந்தவுடன் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்போரூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நேற்று நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஓஎம்ஆர் சாலையின் நடுவே நின்றபடி வழக்கறிஞர்கள் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள அம்பேத்கர் படங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அங்கு வந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்ற வாயிலுக்கு வெளியே நின்றபடி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.