Saturday, July 27, 2024
Home » நிலம் பட்டா தொடர்பான விவகாரம்; 16 தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி உத்தரவு

நிலம் பட்டா தொடர்பான விவகாரம்; 16 தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி உத்தரவு

by Suresh

சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத வழக்கில் 16 தாசில்தார்களுக்கு 1 மாதம் சிறை தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிலத்திற்கு பட்டா வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 2010ல் பிறப்பித்த உத்தரவை அம்பத்தூர் தாசில்தார் அமல் படுத்தவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 முதல் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அம்பத்தூர் தாசில்தார் மற்றும் 2010லிருந்து இதுவரை பணியில் இருந்த சம்மந்தப்பட்ட 19 தாசில்தார்களை தானாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்து அவர்கள் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப கடந்த மாதம் 5ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்மந்தப்பட்ட தாசில்தார்களில் 3 பேர் இறந்துவிட்டதால் மற்ற 16 பேரும் ஆஜராகவில்லை. இதனால், கோபமடைந்து அரசு தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 16 பேருக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களுக்கு சம்மன் அனுப்புமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மாலை ஆஜராகி முறையிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் செயல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில், தனி நீதிபதியின்உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆ.செல்வேந்திரன் ஆகியார் ஆஜராகி தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

You may also like

Leave a Comment

14 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi