சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து சொத்து ஆவணங்களின் நகல்களை எவர் வேண்டுமானாலும் பணம் செலுத்தி பெறலாம், அதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை என்றும் பத்திரப்பதிவுத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும் இந்த விதி நீடிக்கக்கூடாது.
எந்த சொத்து ஆவணமும் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆவண நகல் கோரும் விண்ணப்பதாரர்கள், அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்; அதை பதிவு செய்த பிறகு, உரிமையாளர் ஒப்புதலுடன், நகல் வழங்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.