சென்னை : நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சைதாப்பேட்டையில் நிலத்தை அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி உளபட 10 பேர் மீது 2003ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பொன்முடி மீதான வழக்கை எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
இவ்வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக 90 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி,ஜெயவேல் தீர்ப்பினை ஒத்திவைத்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி, சென்னை துணை மேயர் மகேஷ் குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.