ஊத்துக்கோட்டை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம்-பெரம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பரப்பளவு 5 ஏக்கர். இந்த மருத்துவமனைக்கு பெரம்பூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், சூளைமேனி, சென்னங்காரணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பொது சுகாதாரம் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்துசெல்கின்றனர்.
இந்த மருத்துவமனையைச்சுற்றி புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் போன்றவை மருத்துவமனைக்குள் புகுகிறது மேலும் ஆடு, மாடுகள் கண்டபடிமேய்கிறது. இதனால் இந்த மருத்துவமனையைச்சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் 2 டாக்டர், 20 நர்ஸ்கள் பணியாற்றி வருகிறார்கள். கூடுதலாக இரவு நேரத்தில் ஒரு டாக்டர் நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.