திருமலை : ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரமோற்சவத்தின் 6 வது நாளான நேற்று இரவு கோயிலுக்கு எதிரே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் சீதா – ராமர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தை காண ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் இருந்து ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு வஸ்திரங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை தர்மா வழங்கினார். மாநில அரசு சார்பில் இந்து அறநிலையத்துறை செயலாளர் கரிகாலவலவன் பட்டு வஸ்திரம் மற்றும் தாலிக்கொடி வழங்கினார். கல்யாணோத்ஸவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் இருந்து பக்தர்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகளை கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது. 3 டன் சம்பர்தாய மலர்களும் 30 ஆயிரம் கட் ரோஜா பூக்கள் கொண்டு கல்யாண மேடை மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்தையொட்டி 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண பல இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பட்டது. பக்தர்களுக்கு மேடையின் இருபுறமும் சுமார் 300க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் அமைக்கப்பட்டு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. 3 லட்சம் மோர் பாக்கெட்டுகள், 3 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. 1500க்கும் மேற்பட்ட ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு சேவை செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம்களும், 400 தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டது. 600 தூய்மை பணியாளர்களுடன் தூய்மை பணிகள் நடைபெற்றது.