தென்காசி: ஒருவார இடைவெளிக்கு பின்னர் குற்றால அருவிகளில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்ததையடுத்து காலை 6:30 மணியில் இருந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்திருப்பதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.