Wednesday, May 15, 2024
Home » குன்றத்தூர் அருகே வயதான தம்பதி மர்ம சாவில் திருப்பம்; கழுத்தை நெரித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலம்: கொலையாளிகளுக்கு வலை

குன்றத்தூர் அருகே வயதான தம்பதி மர்ம சாவில் திருப்பம்; கழுத்தை நெரித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலம்: கொலையாளிகளுக்கு வலை

by Suresh

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வயதான தம்பதி மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமாகியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் ஈவிபி டவுன் பகுதியில் வசித்து வந்தவர்கள் கணேசன் (83), இவரது மனைவி ஜெய்பார்வதி (72). இவர்களது மகன் சக்திவேல் (46). இவர்களது சொந்த ஊர் சேலம். அங்கு செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து குன்றத்தூருக்கு வந்து குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7ம்தேதி சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் வயதான பெற்றோர் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகன் சக்திவேலிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் எவ்வித துப்பும் துலக்காத நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், தலையணை உள்ளிட்ட பொருளால் வயதான தம்பியின் முகத்தை அமுக்கியும் கழுத்தை நெரித்துள்ளனர்.

இதனால் அவர்களின் மூச்சு குழாய் உடைந்து ரத்தம் வழிந்து மூச்சுவிட முடியாமல் இறந்துள்ளனர். இதன் மூலம் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் சமீபத்தில் இவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையை பெரிய தொகைக்கு விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணம் மூலம் சக்திவேல் புதிதாக 3 திரைப்படங்களை இயக்கி தயாரித்ததாக கூறப்படுகிறது. அந்த படம் வெளிவருவதற்கு முன்பே தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேலுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக வயதான தம்பதி கொலை செய்யப்பட்டனரா? அல்லது 20 ஆண்டுக்கு முன்பு சக்திவேலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் மனைவி வழி உறவினர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகாததால் இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கமாட்டார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

எனவே, கணேசன் குடும்பத்தை பற்றி நன்கு அறிந்த எவரோதான் இந்த கொலையை செய்திருக்க கூடும். இதனிடையே, குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேம ராக்களையும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் போலீசாருக்கு ஒரு சில துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் கொலை குற்றவாளி யார் என தெரிந்துவிடும் என போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

2 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi