குலசேகரம்: குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் அருவியாக விழுகிறது. இதனால் அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உல்லாச படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே மழைக்காலம் தவிர வெயில் காலங்களில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் சிற்றோடை போன்று கொட்டுகிறது. தற்போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மலைகள் மற்றும் காடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
ஊற்று, நீரோடைகள் வறண்டு விட்டதால் கோதையாற்றிலும் தண்ணீர் குறைவாகவே செல்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமான அளவில் கொட்டுகிறது. குமரி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மக்கள் சராசரி நாட்களிலும் திற்பரப்பு அருவிக்கு படையெடுத்து வருகின்றனர். திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் உற்சாகமாக குளியல் போட்டதோடு, மேல்தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை ரசித்தனர்.